”உம்மா தர்ரேன்...” பாடல் மூலம் பிரலமான 'ராஜபுத்திரன்' கே.எம்.சபி!
சினிமா என்ற கடலில் முத்தெடுப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே என்றாலும், அந்த ஒரு சிலர் மக்களின் கவனத்தை சட்டென்று தன் பக்கம் திருப்பும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் இதற்கு சான்று. தற்போது இவர்களின் வரிசையில் நம்பிக்கை நட்சத்திரமாக ஒரு பாடல் மூலமாகவே தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்திருக்கிறார் இளைஞர் கே.எம்.சபி.
‘ராஜபுத்திரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இளம் தயாரிப்பாளராக 21 வயதில் அறிமுகமாகியிருக்கும் கே.எம்.சபி, அப்படத்தில் இடம்பெற்றுள்ள “உம்மா தர்ரேன்...” என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருப்பதோடு, சில காட்சிகளில் நடிக்கவும் செய்திருக்கிறார். துள்ளல் நடனம், கவர்ந்திழுக்கும் உடல் மொழி மற்றும் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் அந்த ஒற்றை பாட்டில் ரசிகர்களை கவர்ந்திருக்கும் கே.எம்.சபி , “யார் அந்த இளைஞர் ?” என்று படம் பார்ப்பவர்களை கேட்க வைத்திருக்கிறார்.
கடந்த மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ராஜபுத்திரன்’ திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் பாடியிருக்கும் ”உம்மா தர்ரேன்...” என்ற பாடலும், அந்த பாடலில் நடனம் ஆடியிருக்கும் கே.எம்.சபியும் பிரபலமடைந்திருக்கிறார்கள். சபி எதிர்பார்க்காத வரவேற்பு அவருக்கு கிடைத்திருப்பதால், அடுத்தக்கட்டமாக விரைவில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக திட்டமிட்டுள்ளார்.
நடனம், ஆக்ஷன், நடிப்பு என அனைத்திலும் முறையாக பயிற்சி பெற்றுள்ள கே.எம்.சபி, நாயகனாக தமிழ் சினிமாவில் நிச்சயம் தனக்கென்று தனி இடத்தை பிடிப்பார், என்று அவரது அந்த ஒரு பாடல் காட்சியை பார்த்தே பிரபலங்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் தயாரிப்பாளராக தரமான படத்தை தயாரித்த மகிழ்ச்சியில் இருக்கும் சபி, மற்றொரு பக்கம் நடிகராக வெற்றி பெறுவார் என்ற பிரபலங்களின் நம்பிக்கை வார்த்தையால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இளம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இளம் நடிகராக கே.சபி கவனம் ஈர்த்தது போல், அவரது தந்தையும் படத்தின் இணை தயாரிப்பாளருமான கே.கோதர்ஷா சில காட்சிகளில் நடித்து குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர், என்று பாராட்டு பெற்றிருக்கிறார்.
பிரபு மற்றும் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ராஜபுத்திரன்’ படத்தில் கிருஷ்ணபிரியா நாயகியாக நடித்திருக்கிறார். வில்லனாக கோமல் குமார் நடித்திருக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
கிரசண்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சபி தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பை கே.கோதர்ஷா மற்றும் டி.பாரூக்கு கவனித்துள்ளனர். மகா கந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார். எஐஎஸ்.நெளஃபல் ராஜா இசையமைத்துள்ளார். வைரமுத்து மற்றும் மோகன் ராஜன் பாடல்கள் எழுத, ஐயப்பன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சண்டைக்காட்சிகளை ராகேஷ் ராக்கி வடிவமைத்திருகிறார்.
நல்ல படம் எடுத்தும் போதிய திரையரங்குகள் கிடைக்காமல் போனது படக்குழுவை சற்று வருத்தமடைய செய்தாலும், வெளியான இடங்களில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதும், படத்தை பார்ப்பவர்கள், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘மாமன்’ போன்ற படங்கள் போல் ‘ராஜபுத்திரன்’ படமும் குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருப்பதாக பாராட்டி வருவதும், படக்குழுவினரை உற்சாகமடைய செய்திருக்கிறது.
கருத்துரையிடுக