தாம்பரம், ஆவடிக்கு புதிய காவல் ஆணையரகம்!

தாம்பரம், ஆவடிக்கு புதிய காவல் ஆணையரகம்!


சென்னை நகரின் மையப்பகுதியை காட்டிலும், புறநகர் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருவதாலும், மக்கள் குடியேற்றம் அதிகரித்து வருவதாலும் காவல்துறையின் கண்காணிப்பையும், நடவடிக்கையையும் அந்தப் பகுதிகளில் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்தது.

இதை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் 13-ந்தேதி சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை பெருநகர காவல் துறையை பிரித்து தாம்பரம், ஆவடி என இரு காவல் ஆணையரகங்கள் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு காவல் மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளும் சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து இரு காவல் ஆணையரகங்களுக்கும் எல்லைப் பகுதிகளை பிரிப்பது, காவல் நிலையங்களை பிரிப்பது, புதிதாக நிர்வாகக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன.

அந்த வகையில், புதிய காவல் ஆணையரகங்களை விரைந்து கட்டமைக்கும் வகையில், தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. ரவியும், ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏ.டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோரும் நியமிக்கப்பட்டனர். இவர்களே புதிய காவல் ஆணையரகங்கள் உருவாகியதும், அந்த காவல் ஆணையரகங்களின் முதல் ஆணையர்களாகப் பணியாற்றவுள்ளனர்.

குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதம் 3 காவல் ஆணையரகங்களுக்கான காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன. இதன்படி, 137 காவல் நிலையங்களுடன் செயல்பட்ட பெருநகர காவல்துறையில் 33 காவல் நிலையங்கள் குறைந்தன.

இதில் 20 காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரகத்துக்கும், 13 காவல் நிலையங்கள் தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கும் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து பிரித்து வழங்கப்பட்டன. சென்னை காவல்துறை 104 காவல் நிலையங்களுடன் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக புதிய காவல் ஆணையரகங்களுக்குத் தேவையான ஆயுதப்படை காவலர்கள், மத்தியக் குற்றப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளுக்கு தேவையான காவலர்கள், அதிகாரிகள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், புதிய காவல் ஆணையரகங்களுக்குத் தேவையான கணினி உள்ளிட்ட இயந்திரங்கள், வாகனங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவையும் பெறப்பட்டன. இந்த நிலையில், இரு புதிய காவல் ஆணையரகங்களையும் அமைக்க நிர்வாக ரீதியான பணிகள் ஓரளவுக்கு முடிந்துள்ளதை அடுத்து இரு காவல் ஆணையரகங்களும் இன்று முதல் செயல்பட தொடங்கியது.

இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 2 புதிய காவல் ஆணையர் அலுவலகங்களை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் அலுவலகம், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் இயங்குகிறது. அதேபோல், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் சோழிங்கநல்லூர் அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாகச் செயல்படுகிறது.

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு நிரந்தர கட்டிடமாக தாம்பரத்திலேயே புதிய காவல் ஆணையர் அலுவலகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் முடிந்தவுடன் புதிய கட்டிடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் செயல்படத் தொடங்கும். இதேபோல் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கும் 3 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.




கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.