இங்கிலாந்தை 336 ரன்களில் வீழ்த்தி இந்தியா வெற்றி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்துக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்று (ஜூலை 5) நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் 24 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்தியா அபார வெற்றி:
மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் தொடங்க தாமதம் ஆனது. மழை நின்ற பின், இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இங்கிலாந்து அணியின் ஆலி போப் மற்றும் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார் ஆகாஷ் தீப். ஆலி போப் 24 ரன்களும், ஹாரி ப்ரூக் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருப்பினும், இந்த பார்ட்னர்ஷிப்பை வாஷிங்டன் சுந்தர் உடைத்தார். வாஷிங்டர் சுந்தரின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜேமி ஸ்மித் மற்றும் பிரைடான் கார்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். இருப்பினும், பிரைடான் கார்ஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய ஜேமி ஸ்மித் 99 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
கருத்துரையிடுக