தாய் மகன்கள் தீயில் கருகி பலி!
கரூர்:
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தாய் மற்றும் இரண்டு மகன்கள் பலியாயினர்.ராமநாதபுரம் மாவட்டம், கடம்பனந்தலை சேர்ந்தவர் கருப்பையா, 60; மனைவி குப்பம்மாள், 55. இருவரும், 20 ஆண்டுகளுக்கு முன், கரூர் அருகே ராயனுாரில் குடியேறி, ஓட்டல் நடத்தி வருகின்றனர்.
கருப்பையாவின் மகள் முத்துலட்சுமி, 25; இவரது கணவர் பாலகிருஷ்ணனும் ஓட்டல் நடத்தி வந்தார். தம்பதிக்கு, ரஷித், 3, தட்சித், 2, என, இரு மகன்கள் இருந்தனர். ஓட்டலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடன் தொல்லைக்கு பயந்து, மனைவி, குழந்தைகளை விட்டு, பாலகிருஷ்ணன் பிரிந்து சென்று விட்டார்.
முத்துலட்சுமி, தந்தை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, கருப்பையா, மனைவியுடன், ராமநாதபுரம் சென்று விட்டார்.நேற்று காலை, 6:00 மணிக்கு கருப்பையா வீட்டில், திடீரென தீப்பிடித்தது.
கரூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, வீட்டுக்குள் சென்றனர். அப்போது, உடல் கருகிய நிலையில் முத்துலட்சுமியும், இரண்டு மகன்களும் இறந்து கிடந்தனர்.
மொபைல் போன், சார்ஜருடன் எரிந்து கிடந்தது. மொபைல் போன் சார்ஜர் வெடித்து, வீட்டில் தீப்பிடித்ததா அல்லது குழந்தைகளுடன், முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா என, தான்தோன்றிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துரையிடுக