'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் எப்படி இருக்கு?!
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் நடிகர் ஆர்யாவின் ஷோ பீப்பிள் இணைந்த தயாரிப்பில் சந்தானம், செல்வராகவன், கௌதம் மேனன், கீத்திகா, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, நிழல்கள் ரவி, மாறன், மொட்டை ராஜேந்தர், பிரசாந்த் ரங்கசாமி ஆகியோர் நடித்துள்ள படம் தான் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
ஒரு பாழடைந்த தியேட்டர். அங்கு ஓடுகிற ‘ஹிட்ச்காக் இருதயராஜ்’ படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொள்ளுமாறு ஒரு விமர்சகருக்கு (பிரசாந்த்) அழைப்பு விடுக்கப்படுகிறது. அவரும் அந்த தியேட்டருக்கு செல்கிறார். ‘தனியாவா வந்திருக்கீங்க, குடும்பத்தோட வரலை’ என்று கேட்கும் நிர்வாகி ஒருவர் (கதிர்), அவரை தியேட்டருக்குள் அழைத்துச் செல்கிறார். ஆனால், உள்ளே பார்வையாளர்கள் எவருமில்லை. அதனைக் கண்டு அவர் திகைக்கிறார்.
‘இது உங்களுக்கு மட்டுமான ஸ்பெஷல் ஷோ’ என்று அவரை இருக்கையில் அமர்த்துகிறார் அந்த நபர். அவர் சென்றபிறகு படம் ஓடத் தொடங்குகிறது. சில நிமிடங்களிலேயே, ’திரையில் தெரிவது உண்மையான திகில்’ என்று அந்த விமர்சகர் உணர்கிறார். அதற்குள் அந்த இடத்தை ஆக்கிரமிக்கிறது இருதயராஜின் (செல்வராகவன்) ஆவி.
தான் இயக்கித் தயாரித்த படத்தை மோசமாக விமர்சனம் செய்த விமர்சகர்களால் அது தோல்வியுற்றதாகக் கருதும் இருதயராஜ், தேடித் தேடி விமர்சகர்களைக் கண்டறிந்து தனது தியேட்டருக்கு வரவழைத்துக் கொலை செய்கிறார். அந்த உண்மை தெரிந்ததும், ஒரு கும்பல் அவரையும் தியேட்டர் நிர்வாகியையும் கொல்கிறது. இறந்தபிறகு ஆவியாக மாறி, மீண்டும் சினிமா விமர்சகர்களை இருவரும் வேட்டையடுகின்றனர்.
அந்த வரிசையில் இடம்பெறுகிற ஒருவர்தான் கிருஷ்ணா (சந்தானம்). சமூகவலைதளங்களில் ‘கிஸா 47’ என்ற பெயரில் அவர் பிரபலம். ஆட்டோ ஓட்டுகிற தந்தை பாஸ்கர் (நிழல்கள் ரவி), ஹவுஸ்வொஃய்ப் ஆன தாய் தேவகி (கஸ்தூரி), வீட்டில் இருக்கிற தங்கை தேவி (யாஷிகா ஆனந்த்) ஆகியோரு கிருஷ்ணா எளியதொரு வாழ்வை வாழ்ந்து வருகிறார்.
அவரும் ஒரு பெண்ணும் தீவிரமாகக் காதலித்து வருகின்றனர். அப்பெண்ணின் பெயர் ஹர்ஷினி (கீதிகா திவாரி). ஒருநாள் ’இருதயராஜ் அண்ட் கோ’ அனுப்பிய ’ஸ்பெஷல் ஷோ’ அழைப்பிதழ் கிருஷ்ணாவின் வீட்டிற்கு வருகிறது. அந்த நேரத்தில் அவரது வீட்டுக்கு வந்த ஹர்ஷினி, அதனைக் கையிலெடுக்கிறார்.
உடனே, தனது குடும்பத்தினரையும் ஹர்ஷினியையும் ‘டைவர்ட்’ செய்து வேறு பேச்சுகளை பேசுகிறார் கிருஷ்ணா. குறிப்பிட்ட தியேட்டருக்கு தனியாகச் செல்கிறார். அந்த இடமே வினோதமாகத் தெரிகிறது அவருக்கு. உடனே ‘யூடர்ன்’ இட்டு வீடு திரும்புகிறார். ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அனைவரையும் அழைத்துக்கொண்டு வர்ஷினி ஒரு ஸ்பெஷல் ஷோ பார்க்கச் சென்றதாகத் தகவல் சொல்கிறார் பக்கத்துவீட்டுக்காரர்.
அடித்து பிடித்து அந்த தியேட்டருக்கு மீண்டும் பறக்கிறார் கிருஷ்ணா. அங்கு அவர்கள் யாருமே இல்லை. இருதயராஜின் ஆவி மட்டுமே இருக்கிறது. அந்த தியேட்டரில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
’அந்த ஸ்கீரின்ல ஓடுற படத்துலதான் உன் குடும்பம் சிக்கியிருக்குது. நீயும் அங்க போ. போய் முடிஞ்சா உன்னோட உயிரை காப்பாத்திக்க’ என்கிறது இருதயராஜ் ஆவி. பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை...
படம் முழுவதும் சந்தானம் தனது காமெடி மூலம் நகர்த்தி செல்கிறார். மொட்டை ராஜேந்திரன் அடிக்கும் காமெடி படத்தில் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம். படத்தின் மொத்த கதாபாத்திரங்களும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால்
காமெடியில் இன்னும் கூடுதல் கவனம் தேவை..... கதை பெரிய அளவில் இல்லை என்றே சொல்லலாம்....
மொத்தத்தில் இந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' ஒரு முறை குடும்பத்துடன் பார்க்கலாம்.
RATING 2.9/5
கருத்துரையிடுக